Tuesday, September 20, 2011

சித்த மருத்துவ பட்டப் படிப்பு: கலந்தாய்வு எப்போது?

சென்னை, செப்.18: தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புகளுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர், மாணவர்களிடையே எழுந்துள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1964-ம் ஆண்டு முதல் 47 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சி.சி.ஐ.எம்.) அனுமதி மறுத்துள்ளது.
சிசிஐஎம் அதிகாரிகள் குழுவினர் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்ய வந்தபோது, கல்லூரியின் மருத்துவமனையில் 50 சதவீத அளவுக்கு நோயாளிகள் இல்லாததைச் சுட்டிக் காட்டி 100 பி.எஸ்.எம்.எஸ். படிப்பு இடங்களுக்கான ஒப்புதலை நிராகரித்துள்ளது.
இதே போன்று நாகர்கோயில் ஆயுர்வேத அரசு மருத்துவக் கல்லூரியில் 50 பி.ஏ.எம்.எஸ். படிப்பு இடங்களிலும், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எச்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும் சி.சி.ஐ.எம். ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த இடங்களுக்கு அனுமதி பெற தமிழக அரசின் சுகாதாரத் துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
தனியார் கல்லூரிகளுக்கும்... சித்த-ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், பி.ஏ.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும், சிசிஐஎம் அனுமதி மறுத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த படிப்பு இடங்களிலிருந்து 65 சதவீத இடங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும்.
அனுமதி கிடைக்காமல் இருப்பதால், அரசு ஒதுக்கீட்டுக்கு
இடங்கள் கிடைக்காத நிலை தொடருகிறது.
எவற்றுக்கெல்லாம் அனுமதி? சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் உள்ள 26 பி.யு.எம்.எஸ். இடங்கள், அரசு இயற்கை-யோகா மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 பி.என்.ஒய்.எஸ். இடங்களுக்கு சிசிஐஎம் அனுமதி அளித்துள்ளது. சுயநிதி கல்லூரிகளைப் பொருத்தவரை, மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
காத்திருக்கும் 1,400 மாணவர்கள்: சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், இயற்கை-யோகா மருத்துவ பட்டப்படிப்புகளில் கலந்தாய்வு அடிப்படையில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 1,400 பேர் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-வது வாரம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, செப்டம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்த இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு திட்டமிட்டிருந்தது.
மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சிசிஐஎம்) பல கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்க அனுமதி தராததால், தரவரிசைப் பட்டியலை வெளியிடாமலும் கலந்தாய்வு தேதி குறித்துத் தகவல் வெளியிட முடியாமலும் தேர்வுக் குழுவினர் உள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் யோசனை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு உள்பட பிற படிப்புகள் அனைத்தும் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் இனியும் காலதாமதம் செய்யாமல், சிசிஐஎம் இப்போது அனுமதி அளித்துள்ள இந்திய மருத்துவ முறை கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்பு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வை உடனடியாக தேர்வுக் குழு அறிவிக்க வேண்டும் என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள் உள்ளிட்ட பிற கல்லூரிகளின் இடங்களுக்கு அனுமதி கிடைத்தவுடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க அக்டோபர் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment