Tuesday, September 6, 2011

"அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!


"அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!

First Published : 06 Sep 2011 01:38:26 AM IST


சென்னை, செப். 5: தமிழகத்தில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்கள் மற்றும் 3 தனியார் சித்த மருத்துக் கல்லூரியின் 120 இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி மறுத்துள்ளது.
1964-ல் தொடங்கப்பட்ட மிகப் பழமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், முதுநிலை மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சித்த மருத்துவக் கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரியின் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், கோவை ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் 30 இடங்கள், கன்னியாகுமரி படுக்கடையில் உள்ள ஏடிஎஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியின்
50 இடங்கள் என 120 இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நாகர்கோயிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.) இடங்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தர்மா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 40 இடங்கள் என மொத்தம் 90 பி.ஏ.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி அளிக்கவில்லை.
பரிசீலனையில்... சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களுக்கும், 20 முதுநிலை மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களுக்கும் மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சிலின் அனுமதி இதுவரை கிடைக்காத நிலை தொடருகிறது.
அதாவது, இந்த இடங்களைப் பொருத்தவரை அனுமதி நிராகரிக்கப்பட்டதாகவோ அல்லது அனுமதி அளிக்கப்படும் என்ற தகவலோ இல்லை.
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.எச்.எம்.எஸ்.) இடங்களுக்கும் இதே நிலை தொடருகிறது.
ஒரே ஆறுதல்: மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 40 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களுக்கு மட்டுமே நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
கலந்தாய்வு நடத்த முடியாமல்...: சித்த மருத்துவ பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேத மருத்துவ பட்டப்படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.), ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு (பி.எச்.எம்.எஸ்.), இயற்கை-யோகா மருத்துவப் படிப்பு (பி.என்.ஒய்.எஸ்.) ஆகியவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டிலும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேர இரண்டு மாதங்களுக்கு முன் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
இந்தப் படிப்புகளில் சேர உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 1,400 மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 3-வது வாரம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, செப்டம்பர் முதல் வாரம் கலந்தாய்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் மேலே குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் சித்த-ஆயுர்வேத-ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக சிக்கல் தொடர்வதால், தரவரிசைப் பட்டியலை வெளியிடவோ, கலந்தாய்வை நடத்தவோ முடியாத நிலைக்கு சித்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தள்ளப்பட்டுள்ளது.
முதுநிலை இடங்களுக்கும்... பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கு மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கும் மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
மேலும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (என்ஐஎஸ்) உள்ள முதுநிலை சித்த மருத்துவ இடங்களையும் (எம்.டி.) 25-ஆக மத்திய இந்திய மருத்துவ முறை குறைத்துள்ளது.
காரணம் என்ன? மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமை அல்லது சித்த மருத்துவக் கல்வியின் தரத்தைக் காக்கும் வகையில் மருத்துவமனை வசதிகள் இல்லாமை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைக் காரணம் காட்டி மாணவர் சேர்க்கை அனுமதியை மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சிசிஐஎம்) மறுத்துள்ளது.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றால், சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறை இயக்குநரகம் செயல்படுகிறதா என சித்த மருத்துவக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

No comments:

Post a Comment