Wednesday, February 8, 2012

சிக்கல் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்


சிக்கல் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்

First Published : 08 Feb 2012 02:17:58 PM IST


திருநெல்வேலி, பிப். 7: நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இப்போது மாணவர்களின் போராட்ட களமாகியிருக்கிறது.
 இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால் சிக்கல் நீடிக்கிறது.
 தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குச் செல்வதற்கு மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவதுபோல் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தை கற்றுத் தேர்வதற்கும் ஆர்வம் காணப்படுகிறது.
 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இக் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 ஆயுர்வேத கல்லூரி: கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. முதலாண்டுக்கு 45 மாணவ, மாணவியரும், 2-ம் ஆண்டுக்கு 48 மாணவ, மாணவியரும் சேர்க்கப்பட்டனர். 3-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 21.10.2011-ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டு 48 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
 ஆனால், அவர்களுக்கான வகுப்புகள் கடந்த 6 மாதமாகியும் தொடங்கப்படவில்லை. இக்கல்லூரிக்கான 3-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய ஆயுஷ் துறை தெரிவித்துள்ளது மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இக் கல்லூரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
 இதுபோல் பாளையங்கோட்டையில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு இளநிலையில் 100, முதுநிலையில் 68 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
 இக் கல்லூரிகளில் உரிய கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், போதிய ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்கவும், மூலிகைப் பண்ணைகளை அமைக்கவும் இங்கு ஆய்வு மேற்கொண்ட மத்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் அவ்வப்போது அறிவுறுத்தியும் கடந்த சில ஆண்டுகளாக அதன்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 மக்கள் பிரதிநிதிகள் அக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு நடத்துகிறார்கள். ஆனாலும் அடிப்படை வசதிகள்கூட அங்கு செய்யப்படவில்லை.
 போதிய மருந்துகள் தயாரித்து வழங்காததால் இக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதில்லை. இக் கல்லூரிக்கான மூலிகைப் பண்ணை அமைக்க தேரேகால்புதூர் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டும் அங்கு மூலிகைகளை வளர்க்கவில்லை.
 ஏற்கெனவே பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்ட கோட்டாறு அரசு மருத்துவமனைக் கட்டடத்தை ஆயுர்வேத கல்லூரியாக மாற்றியுள்ளனர். இதனால் போதுமான வசதிகள் இல்லை. இங்குள்ள உள்நோயாளிகள் பிரிவில் பெரும்பாலான படுக்கைகளும் காலியாக வெறிச்சோடியிருக்கின்றன.
 பாளையங்கோட்டையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தாற்காலிக கட்டடத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
 தற்போதும் அதே பழைய கட்டடத்தில் கல்லூரி செயல்படுகிறது. மூலிகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள புதிய இடத்தில் இந்தக் கல்லூரிக்கான கட்டடத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
 ஆனால் அக்கோரிக்கை கிணற்றில் இட்ட கல்லாகவே இருக்கிறது.
 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்த அரிய மூலிகைகள் பலவும் தற்போது காணாமல் போய்விட்டன.
 பாரம்பரியமிக்க இந்தக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தொடக்கத்தில் அதிகளவில் நோயாளிகள் வந்து மருந்துகளை பெற்றுச் செல்வார்கள். சரியான விகிதத்தில் மூலிகைகளைக் கலந்து உருவாக்கப்படும் மருந்துகளை பற்றாக்குறை இல்லாமல் மருத்துவர்கள் அவர்களுக்கு அளித்ததால் நோய்களும் குணமாயின.
 இப்போது நிலைமை அப்படியில்லை. மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இக் கல்லூரியில் போதிய அளவுக்கு ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
 இதுபோன்று பல்வேறு குறைபாடுகளுடன் கல்லூரியும், மருத்துவமனையும் செயல்படுவதை மத் திய ஆயுஷ் துறை பலமுறை சுட்டிக்காட்டியும் அவை சரிசெய்யப்படவில்லை. இதனால் இப்போது மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் கெஞ்சி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியிலும் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், போதிய ஆசிரியர்களை நியமித்தும், கட்டமைப்புகளையும், மூலிகைப் பண்ணைகளை  அமைத்தும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதே பிரச்னைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. 

No comments:

Post a Comment